நமது பழங்கதைகளில் கடவுள் தனது துணைவியுடன் இருப்பதாகக் காட்டப்படுவது உண்மைதான். இருப்பினும் ஆழ்ந்த தத்துவார்த்தமாகக் காண்போமனால் முழுமுதற் கடவுளும் மற்ற தெய்வங்களும் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. ஆகவே அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.
பெரும்பாலும் கிராமங்களில் கடவுளை ஆணாகக் கருதுகிறார்கள். கடவுளின் ஆற்றல் அல்லது சக்தி அவரது துணைவியாக உருவகஞ் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக விஷ்ணுவும் லட்சுமியும் இவ்வாறு கூறப்படுகிறது. இந்து கோயில்கள், கலைகள் மற்றும் பழங்கதைகள் கடவுள் எல்லா இடங்களிலும் நேசிக்கப்படும் தெய்வீக தம்பதியராகக் காட்டப்படுகிறார். இருப்பினும் தத்துவார்த்தமாகவும் கவனமாகவும் கூறப்படுவது யாதெனில் கடவுளும் கடவுளின் ஆற்றலும் ஒன்று என்பதாகும். பிரிக்க முடியாத தெய்வீக ஜோடி கடவுளுடன் ஒன்றித்திருத்தலை விளக்குகிறது.
இந்து சமயம் பலபடிநிலைகளில் பலவகை மனிதர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. பெரிய பெரிய தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியாத கல்வியறிவற்ற மக்களுக்கு கதைகள் மூலம் இந்து சமயம் கற்பிக்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு இந்து சமுதாயத்துக்கும் கோயிலே மையமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் கோயிலையும் அதிலுள்ள தெய்வத்தையும் ஒருமுகமாகக் காண்கிறார்கள். இத்தகைய கதைகளில் தெய்வங்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கின்றனர். மேலான தத்துவங்களை அறிந்த இந்துக்கள் தனக்குள்ளும் கோயில்களில் வழிபடும்போதும் அவர் இருப்பதை உணருகின்றனர். எளிய மக்கள் தங்களை இறைவனாகவும் அல்லது இறைவியாகவும் இருக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய கதைகளை புராணங்கள் என்று கூறுவர். குழந்தைகள் வளர்ந்து வரும்போது அக்கனி குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்து நடனம், நாடகம், மற்றும் கதை கூறுதல் போன்றவற்றிற்கு அடிப்படையாகத் திகழ்கிறது இப்புராணங்கள். இக்கதைகள் குடும்பம் எப்படி வாழவேண்டும், குழந்தைகள் எப்படி வளர்க்கப்படவேண்டும் என்பதையும் மற்றும் பலவற்றைப்பற்றியும் விளக்குகின்றன. அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு முன் சில நூல்களே இருந்தன. ஆகவே இந்து சமயம் வாய்மொழியாகக் கதைகள், நீதிக் கதைகள் கூறி கற்பிக்கப்பட்டு வந்தது. குழந்தைகளுக்கான வன்முறைக் கதைகள் தவிர்க்கப்பட வேண்டியவையாக இருப்பினும் பெருமளவிலான புராணக்கதைகள் நன்மை தரக் கூடியனவாக இருக்கின்றன.
விரிவான விளக்கம்: இந்து சமயத்தின் மேலான தத்துவங்களைப் படிப்பவர்கள் கடவுள் ஆணுமல்ல பெண்ணுமல்ல என்பதை அறிவார்கள். யோகத்தின் மறைபொருளான நோக்கம் கடவுளைப் போன்ற நிலையை எய்துவதாகும். ஆண் பெண் மின்னோட்டம் கலத்தல், இடை பிங்கள நாடிகள் ஆன்மீக மின்னோட்டத்தில் கலத்தல், சுஷமுனா ஒவ்வொருவரின் முல்லந்தண்டின் மத்தியில் நடைபெறுவதன் மூலமே இது முழுமை பெறும்.
தெய்வங்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர்கள் முழுமையாக தங்களுக்குள் தான் இருக்கிறார்கள் என்றும் இந்துக்களுக்குத் தெரியும். இந்த ஒற்றுமை சிவபெருமான் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மரபுவழி அமைந்த அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகத்தின் வழி காணப்படுகிறது. போதனைகளிலும் சிவனும் சக்தியும் ஒன்றெனவும் சக்தி சிவனின் ஆற்றல் எனவும் கூறப்படுகிறது. சிவபெருமான், தந்தையாக, தாயாகக் கடவுளாக மிகவும் நேசிக்கப்படுகிறார். ஆனால் உடலுறவு உறுப்புக்கள் மற்றும் திருமண உறவுகள் யாவும் பெளதிக மற்றும்உணர்ச்சி உலகமாகும். ஆனால் தெய்வங்கள் இவற்றிற்கும் அப்பால் உள்ள படிநிலையினைத் தாண்டி இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் ஆன்மா ஆணுமல்ல பெண்ணுமல்ல என்று கூறப்படுகிறது.
வரலாற்றுக் காலத்திலிருந்து இறைவனை அர்த்த நாரீஸ்வரர், பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் காண்கிறார்கள். சிவபெருமான் வலப் பக்கம் ஆணாகவும் இடப்பக்கம் பெண்ணாகவும் இருக்கிறார். இந்தத் தெய்வீகக் காட்சியான தாய் தந்தை கடவுள், பழங்கதைகளில் (புராணக்கதைகள்) கூறப்படும் பிரசித்திப் பெற்ற திருமணம் போன்றவற்றைக் கலைந்து இறைவனும் இறைவியும் அதாவது இறைவனும் சக்தி ஒன்றெனப் பிரகடனப்படுத்துகிறது.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
தெய்வங்களைப் பற்றிய புராணக் கதைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டாமென்று நவீன கால சுவாமிகள் வலியுறுத்தி வருகின்றனர். இப்புராணங்கள் இன்றைய உலகுக்கு ஏற்றவையல்ல. புராணங்கள் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதோடு குழப்பம் மூட்டுபவைகளாகவும் இருப்பதால் குழந்தைகளுக்குப் போதிக்கக் கூடாது. அதற்கு பதிலாக வேத உபநிடதங்களின் உயர் தத்துவங்கள் பற்றியும் இந்துவின் உண்மை உணர்தல் பற்றிய அறிவை ஆழ்ப்படுத்திக் கொள்ள ஊக்கமூட்டப்பட வேண்டும்.
மற்ற சமயத்தவர்கள் இந்து சமயத்தைக் குற்றம் கூறி "காமிக்புத்தக" சமயம் என்றும் கூறுகின்றனர். தெய்வங்களின் திருமணம் போன்ற தவறான கருத்துக்கள் நிலைத்திருக்க மற்றவர்களுக்குக் கூறி வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது. மற்ற சமயங்கள் காலத்துக்கு ஏற்ப எதையும் சரி செய்து கொள்கின்றன.
இந்து சமயமும் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். கடவுள், ஆன்மா மற்றும் உலகத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முன்வர வேண்டும். பதில்கள் நியாயமானதாக, புரிந்து கொள்ளக் கூடியதாக, குழந்தைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, முறையானதாக, அறிவுப் பூர்வமாக, கண்டிப்பாக நமது திருமறையில் கூறப்பட்டப்படியும் மரபுப்படியும் இருக்க வேண்டும். தொழில்நுட்ப யுகத்துக்கு இது மிகவும் அவசியமாகும். இந்து சமயம் எதிர் கால சமயமாதலால் இது மிக அவசியம் கடந்த காலத்துக்காக அல்ல.