10 Questions About Hinduism

imageஇந்துக்கள் மறுபிறவியை நம்புகிறார்களா?

ஆமாம். அழிவற்ற ஆன்மா பல பிறவிகள் எடுப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதன் வழி அனுபவங்கள் பெறுகிறோம், பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம், படிப்படியாக ஆன்மீக மலர்ச்சி பெறுகிறோம். இறுதியாக பெளதிக உடலிலிருந்து வெற்றி பெறுகிறோம்.

பெளதிக உடலை விட்டு நீங்கிய பின்னர் மறுபடியும் அவ்வுடலில் பிறப்பதை மறுபிறவி அல்லது புனர்ஜென்மம் என்கிறோம். ஆம் இந்துக்கள் மறுபிறவியை நம்புகிறார்கள். ஆன்மா இயல்பான முறையில் பக்குவமடையாத நிலையிலிருந்து ஆன்மீக ஒளிபெறச் செய்வதாக நமக்கு விளக்குகிறது. பிறப்பும் இறப்பும் நமக்கு உண்மையில் நடைபெறக்கூடிய ஒன்று. ஆன்மா அழிவற்றது என்று இந்து சமயம் நம்புகிறது, அதற்கு இறப்பு இல்லை. ஆனால் பூமியில் தனது ஆன்மீகப் பயணத்தின் போது ஓர் உடலிலிருந்து இறந்த பின்னர் மற்றோர் உடலில் வசிக்கத் தொடங்குகிறது. இது வண்ணத்துப் பூச்சி புழுவிலிருந்து பூச்சியாக மாற்றமடைவதைப் போன்றதாகும். பெளதிக உடல் ஆன்மாவுக்கு இறப்பு இயல்பானதொரு மாற்றமாகும். ஆன்மா உயிர் வாழ்ந்து கர்மவினைப் பயனால் வழிகாட்டி கடவுளோடு ஒன்று சேரும் வரை நீண்ட யாத்திரை புரியும்.

எனக்கும் தான் இப்பிறவிக்கு முன் பல பிறவிகள் இருந்தன. இன்னும் பல பிறவிகள் வரும் என்று எதிர்பார்க்கின்றேன். இறுதியாக எல்லாம் நலமாக நடந்தேறி எல்லா பாடங்களும் கற்றுத் தேர்ந்த பின்னர் ஞானம் பெற்று

மோட்சத்தை அதாவது வீடுபேறு அல்லது விடுதலை பெறுவேன். இதன் பொருள் யாதெனில் எனக்கு (ஆன்மாவுக்கு) அழவில்லை நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பேன் ஆனால் பெளதிக உடலில் பிறந்து உயிர் வாழ மாட்டேன்.

நவீன அறிவியல் கூட மறுபிறவியைப் பற்றி (உண்மையென்று) அறிந்திருக்கிறது. தனிப்பட்டவர்கள் பலர் கடந்த கால பிறவியைப்பற்றி நினைவு கொள்வதாகப் பல சம்பவங்கள் கூறப்படுகின்றன. இதைப்பற்றி அறிவியலாளார்கள், மனோதத்துவ அறிஞர்கள் போன்றோர் கடந்த பத்தாண்டுகளில் ஆராய்ந்து அவர்களின் கருத்துக்களை நல்ல நூல்களிலும் வீடியோக்களிலும் வெளியிட்டுள்ளனர். கடந்தகால நினைவுகளை சிறு குழந்தைகளும் மிகத் தெளிவாகக் கூறுகின்றனர். அவர்கள் வளர வளர அந்நினைவுகள் மறைந்து விடுகின்றன. மேலும் அவர்களின் உள்ளுணர்வால் அறியும் இறைவனைப்பற்றிய ஞானம் திரையால் மறைக்கப்பட்டுள்ளன. ஞானிகள் பலர் தங்களது முற்பிறவி பற்றிக் கூறியுள்ளனர். அதே போன்று நமது பழங்கால புனித வேத நூல் மறுபிறவியின் உண்மையை வெளிப்படுத்துகிறது.

மறுபிறவியை ஜைனர்கள், சீக்கியர்கள், அமெரிக்காவிலுள்ள சிவப்பிந்தியர்கள், புத்தர்கள், யூதர்களில் சில பிரிவினர், மத நம்பிக்கை அற்றவர்களில் (நாஸ்திகர்கள்) சிலர் மற்றும் அவ்வந்த நாட்டு சுதேசிகள் நம்புகிறார்கள். கிறிஸ்தவர்கள் கூட தொடக்க காலத்தில் மறுபிறவி பற்றிப் போதித்தனர். பிறகு 12ஆம் நூற்றாண்டில் அப்போதனையைக் கைவிட்டனர். உண்மையாகவே இக்கொள்கை உலகத்திலுள்ள மத நம்பிக்கைகளில் மிகவும் விரிவான ஒரு தத்துவக் களஞ்சியமாகும்.

image

ஒவ்வொரு ஆன்மாவும் மறுபிறப்பின் (புணர்ஜென்மம்) மூலம் பலதரப்பட்ட வாழ்க்கைகளை அனுபவ மூலம் பெறுகின்றன. இதற்காக ஆன்மா பூமியில் திரும்பத் திரும்பப் பெளதிக உடலில் பிறப்பெடுக்கின்றது. இங்கே (இப்படத்தில்) ஆன்மாவின் ஏழு வெற்றிகரமான பிறப்புகளை ஒளிக் கதிர்கள் பிரதிநிதிக்கின்றன. கர்ம வினையால் ஆளப்படும் மறுபிறப்பு நிச்சயமான முதிர்ச்சியடையும் படிப்படியான ஓர் இயக்கமாகும்.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

விரிவான விளக்கம்: இறப்பிற்குப் பின் ஆன்மா பெளதிக உடலை விட்டுச் செல்கிறது. ஆனால் ஆன்மா இறப்பதில்லை. அது சூக்கும உடலில் வாழ்ந்து வருகிறது. சூக்கும உடல் அந்தர் லோகம் அல்லது சூக்கும உலகில் வாழ்கிறது. அதுவும் ஓர் உலகமே. நாம் உறக்கத்தில் இரவில் கனவு காணும்போது இந்த உலகத்தில் தான் இருக்கிறோம். மற்றொரு பெளதிக உடலில் குழந்தையாகப் பிறக்கும் வரை நாம் இங்கு அனுபவங்களைப் பெறத் தொடங்குகிறோம். ஒவ்வொரு மறுபிறவி ஆன்மாவும் ஓர் இல்லத்தையும் குடும்பத்தையும் தேர்ந்தெடுக்கிறது. இதனால் கற்றலையும் முதிர்ச்சியையும் பூர்த்தி செய்ய இது ஓர் அடுத்து வரக்கூடிய படியாக அமைகிறது. பல எண்ணிறந்த பிறவிகளில் தர்மத்தைப் பின் பற்றியதால் அன்பு, ஞானம், இறைவனைப் பற்றிய அறிவு ஆகியவற்றில் முழுமையாக முதிர்ச்சி பெறுகிறது. அனைத்துப் பாடங்களையும் கற்ற பின்பும் கர்ம வினைகளைப் பூர்த்தி செய்த பின்னரும் பெளதிகப் பிறப்பு தேவைப்படாது. அந்த ஆன்மா விடுதலை பெறுகிறது. பிறப்பு, இறப்பு, மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுதலையாகிறது. மிகப் புனிதமான ஆன்ம உலகங்களில் சுழற்சி தொடங்குகிறது. தொடக்க நிலைப் பள்ளிகளில் கற்றுத் தேர்ந்த பின்னர் மறுபடியும் தொடக்க நிலைப் பள்ளிக்கு செல்ல மாட்டோமல்லவா? அதுபோலத் தான் இதுவும். புரிந்துணர்வில் நாம் அந்த நிலைக்கு அப்பாற் சென்று விட்டோம்.

இவ்வாறாக வாழ்வின் முக்கிய குறிக்கோள் பணம், துணிமணி, உடலுறவு, ஆற்றல், உணவு மற்றும் பிற மிருக உணர்வுத் தேவைகள் அல்ல. இவை இயற்கைத் தேவைகள். ஆனால் இவ்வுலகில் நாம் தோன்றியதற்கான உண்மைக் கரணியம், அறிந்து கொள்ள, அன்பு காட்ட, இறைவனுக்கும் தெய்வங்களுக்கும் தொண்டாற்றவுமாகும். இது அபூர்வமான விலைமதிப்பற்ற, வாழ்வின் நோக்கம் மற்றும் ஞானம் பெற்று வீடுபேறு அடைதலாகும். இந்த இந்து ஆன்ம சுழற்சி பார்வை அல்லது கருத்து குழப்பம் தரும் கேள்விகள், இறப்பைக் கண்டு பயத்தைப் போக்குதல் போன்ற பலவற்றிற்குப் பதிலளிக்கும். அதே வேளையில் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரே ஆன்மீக இலக்கு நோக்கி சுழற்சி பெறுகின்றன என்ற உத்தரவாதம் கொடுக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவும் கர்ம வினையும் மறுபிறப்பும் வீடுபேறு அடைய (மோட்சத்துக்கு) கொண்டு செல்வதாக இந்துக்கள் நம்புகிறார்கள்.