Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கல்வி

391. §

கற்கத் தகுந்தனவற்றை ஐயந்திரிபறக் கற்றுத் தெளிக. அவ்வாறு கற்றபின், படித்தறிந்த அறவொழுக்கத்துக்கு அமைய வாழ்க.§

392. §

வாழும் உயிர்களுக்கு கண்போல் அமைந்த கலைகள் இரண்டு. எண் எனப்படும் கணிதம் முதலான அறிவியல் ஒன்று, இலக்கணம் இலக்கியம் முதலான அழகியல் மற்றையது.§

393. §

கற்றுத் தெளிந்தவர்க்கே கண்கள் இரண்டுள. கல்லாதவர் கண்கள் முகத்திலே உள்ள இரண்டு புண்கள் என்பர் சான்றோர்.§

394. §

கற்றறிந்தோர் மற்றையவரைச் சந்திக்கும் போது மகிழ்ச்சியுடன் அளவளாவி, பின் இவரை எப்போது மீளக் கூடுவோம் எனும் நினைவுகளுடன் பிரிவர்.§

395. §

செல்வர் முன் இரவலர் தாழ்ந்து நிற்பது போல ஆசிரியர் முன் பணிவுடன் கற்று நிற்பர் அறிஞர். அங்ஙனம் செய்ய நாணுபவர் கல்லாத இழிந்தவராவர்.§

396. §

மணலிலே கிணறு தோண்டும் அளவிற்கு நீரூற்றுப் பெருகுவது போல நூல்களை ஆழ அணுகிப் படிக்கும் தோறும் அறிவு பெருகும்.§

397. §

கற்றுத் தெளிந்தவனுக்கு எல்லா நாடும், எல்லா ஊரும் அவனதேயாம் என அறிந்தும் ஏனோ இறக்கும் வரை ஒருவன் கல்லாது இருக்கிறான்?§

398. §

ஒரு பிறவியிலே ஒருவன் கற்ற கல்வி அவனைத் தொடர்ந்து வரும் ஏழு பிறவியிலும் சென்று உதவும்.§

399. §

தாம் இன்புறுவதற்கு ஏதுவான கல்வியினால் உலகமும் இன்புறுதல் கண்டு கற்றோர் அதனிலும் மேலும் இன்புறுவர்.§

400. §

ஒருவன் கற்ற கல்வி அழிவற்ற அருஞ் செல்வமாகும். ஏனைய பணமும் நிலமும் செல்வங்களாகா.§