இந்துக்கள் கல்லையோ உலோகத்தையோ கடவுளாக வணங்குவதில்லை. நாம் அவ்வுருவத்தின் மூலம் கடவுளை வழிபடுகிறோம். கண்ணுக்குப் புலப்படாத மேலுலகத்திலுள்ள அந்தக் கடவுளை விக்கிரகத்தில் வரவழைக்கின்றோம். இதன் மூலம் அவரோடு தொடர்பு கொள்ளவும் அவர் ஆசி பெறவும் முடிகிறது.
ஆலயங்களிலும் பூசையறைகளிலும் உள்ள கல் அல்லது உலோக விக்கிரகங்கள் கடவுளுக்கான வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல. அவை உருவங்கள். அதன் மூலம் அன்பு, சக்தி மற்றும் ஆசியும் இவ்வுலகத்தில் பிராவகமாகப் பாய்கிறது. தொலைபேசி மூலம் மற்றவர்களோடு தொடர்பு கொள்வதைப் போன்று இவ்வற்புதத்தை எடுத்துக் கொள்ளலாம். நாம் தொலைபேசி கருவியுடன் பேசுவதில்லை, மற்றவர்களோடு தொடர்பு கொள்ள அதை ஒரு சாதனமாகத்தான் பயன்படுத்துகிறோம். தொலைபேசியின் உதவியின்றி தூரத்தில் உள்ளவர்களோடு நாம் பேச முடியாது. அதேபோன்று மூலஸ்தானத்திலுள்ள விக்கிரகம் இன்றி தெய்வத்தோடு தொடர்பு கொள்ள முடியாது. புனித அக்கினியில், புனித மரத்தில் ஆன்மீக விழிப்புப் பெற்ற ஒரு சற்குருவிடமும் தெய்வீகத் தன்மையை உணரலாம். நமது கோயில்களில் நன்கு கற்றுணுர்ந்த சிவாச்சாரியார்கள் மூலஸ்தான விக்கிரகங்களுக்குப் பூசை செய்யும்போது கடவுளை உணரலாம். யோகா பயிற்சி அல்லது தியானம் மூலம் நம்மில் ஆண்டவனை உணரலாம். யோகா என்றால் இறைவனோடு ஒன்று சேர்தல் என்று பொருள். வழிபடும் கடவுளின் உருவங்கள் நமது பக்திக்கும் வழிபாட்டுக்கும் நம்மை ஒருமுகமாக்க உதவுகிறது.
வேறொரு முறையில் விளக்க வேண்டுமானால் விக்கிரகங்களை வழிபடுவதால் இறைவன் எல்லா இடத்திலும், எல்லா பொருள்களிலும் கல், கட்டை, ஜிவராசிகள் அல்லது மனிதர்களிடத்தும் இருக்கிறார் என்ற உண்மையை இந்துக்கள் நம்புகிறார்கள் என்று கூறலாம். ஒரு ஜடப் பொருள் மூலம் தெய்வீகம் தோன்றும் என்று நம்புவதில் வியப்பொன்றுமில்லை. இந்துக்கள் கடவுளை, கல்லில், நீரில், நெருப்பில், காற்றில், ஆகாயத்தில், அவரவர் ஆன்மாவின் உள்ளே காண முடியும். சில இந்துக் கோயில்களில் உள்ள மூலஸ்தானத்தில் விக்கிரகங்கள் கிடையாதென்பது உண்மைதான். ஆனால் அங்கே, ஒரு சின்னம், சில எழுத்துக்களும் வரைபடங்களும் கொண்ட அற்புத யந்திரமாக இருக்கின்றது. எப்படியிருப்பினும் விக்கிரக உருவக் காட்சி பக்தனின் வழிபாட்டை உயர்த்துகிறது.
விரிவான விளக்கம்: பக்தன் இந்து சமயத்தின் சின்னம் அல்லது உருவம் ஆகியவற்றைக் கடந்த நிலையை அடைந்தால் இந்து சமயத்தின் இறுதி நோக்கத்தை எய்த முடியும். இது யோகிகளின் இலக்காகும். இதனால் இந்து சமயம் உலகத்தின் மற்ற சமயங்களைவிட குறைந்த உருவ வழிபாடு கொண்டதாகத் திகழ்கிறது. எல்லாம் கடந்த, காலம் கடந்த, உருவமில்லா, காரண மில்லா உண்மை ஆகியவற்றை அதிகம் அறிந்த சமயங்கள் ஒன்று கூட இல்லை என்று கூறலாம். அல்லது அதிக சின்னங்கள் கடவுளைப் பிரதிநிதித்து இறைவனை உணர தயாராயின என்றும் கூற முடியாது.
நகைச்சுவையாகக் கூறுவோமேயானால் இந்துக்கள் சிலையை வழிபடுபவர்கள் அல்ல. ஓர் இந்து ஒன்றும் செய்யாமல் சோம்பலாக வழிபாடு செய்வதை நான் கண்டதில்லை. அவர்கள் மனவலிமையுடனும் பக்தியுடனும் தவறாமலும், உறுதியுடனும் வழிபடுவர். நமது வழிபாட்டு முறையில் எதுவும் பயன் இல்லாதது என்று ஒன்றுமில்லை.
ஒரு பக்தன் நடராஜப் பெருமானின் வெண்கல விக்கிரகத்தின் உள்ளும் அதற்கப்பாலும் நோக்கும்போது அவரது ஆன்மீக ஒளி உடலைக் காண்கிறார். அவர் இந்து பாரம்பரிய உடை உடுத்தியுள்ளார். அவர் தனது வீட்டுப் பூசையறையில் அன்றாட பூசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். சமஸ்கிரத மந்திரங்கள் கூறுகிறார், பழங்கள், தீர்த்தம், மலர்கள், நறுமண ஊதுபத்தி மற்றும் விளக்குடன் மிகப் பக்தியுடன் இறைவனின் ஆசி பூசைமாடத்திலுள்ள புனித உருவத்தின் மூலம் அனுப்பப்படும் என்று வழிபடுகிறார்.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
ஆனால் "செதுக்கப்பட்ட உருவங்களைப்" பற்றிய கேள்விகள் இருக்கின்றன. எல்லாச் சமயங்களிலும் புனிதச் சின்னங்கள் மூலம் உலக வாழ்க்கைக்குப் பக்திப் பிராவகம் பாய்கிறது. அவற்றுள் சில வருமாறு: கிறிஸ்தவர்களுக்கு சிலுவை அல்லது மாதா மேரி மற்றும் புனித திரோசா சிலை, இஸ்லாமியர்களுக்கு மெக்காவின் புனித காபா, சீக்கியர்களுக்கு ஆதி கிரந்தம், இந்தியாவிலுள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில் பேணப்பட்டு வருகிறது, யூதர்களுக்கு வட்ட வளைவும் தோராவும், புத்தர்களுக்கு தியான நிலையில் அமர்ந்துள்ள புத்தர் உருவம், வட அமெரிக்க இந்தியர்களின் குல மரபுச் சின்னம் (விலங்கு), பாகன் நம்பிக்கை, அனைத்துச் சமயங்களிலுமுள்ள அருளாளர்கள் படைத்த கைவினைப் பொருட்கள் முதலியன அடங்கும். இம்மாதிரயான அடையாளங்களும் செதுக்கப்பட்ட உருவங்களும் அந்தந்த சமயங்களைப் பின் பற்றும் மக்களால் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இவ்வாறான சமய வாதிகள் அனைவரும் சிலை வழிபாடு செய்கிறவர்களா? இதற்குப் பதில் ஆம் என்பதும் இல்லை என்பதும் தான். எங்களது பார்வையில் உலகத்தின் முக்கிய மதங்கள், சிலை வழிபாட்டினை அறிவுப் பூர்வமான, அற்புமான செய்முறைக்குரியது என்ற கருத்தினைப் பகிர்ந்து கொள்கின்றன.
சமயச் சின்னங்கள் மற்றும் வடிவங்கள் மூலம் மனிதனின் துன்பங்கள் தானாகவே மனத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றன. சமய வடிவங்களையும் சின்னங்களையும் உயர்வாக மதிக்கும் தன்மை, புனிதத் தன்மையையும் மற்றும் ஆன்மீக ஞானத்தையும் தூண்டுகிறது. கிறிஸ்துவ மத அடிப்படைத் தத்துவ வாதிகள் (நீடு நிலைக் கொள்கையர்) கூட எல்லா வகையான உருவ வழிபாட்டையும் கத்தோலிக்கர்களின் தேவாலயங்கள், மற்றும் பேராயர் ஆட்சியுள்ள தேவாலயங்கள் உட்பட மறுக்கிறார்கள். தங்களின் புனித நூலான பைபலை அவமதிப்பவர்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அதைப் புனிதமாகக் கருதுகிறார்கள். இவர்களின் கூற்றை நோக்கும்போது அவர்களது பைபலும் இந்துக்களின் புனிதச் சின்னங்களும் ஒரே மாதிரியான மதிப்புடையதாகும்.